இந்தியாவில் நடந்து கொண்டிருக்கும் அக்கப்போருக்கு கல்கண்டு தலையங்கமே சாட்சி. காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின் அவலத்தை விபரமாக எழுதியிருக்கிறது கல்கண்டு. நன்றி கல்கண்டு மற்றும் ஆசிரியர் அவர்களுக்கு.
- பஞ்சரு பலராமன்
விலைவாசியைக் கட்டுப்படுத்த முடியுமா?
மன்மோகன்சிங் ஆட்சியில் பெரிய மாற்றங்களை மக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.ஒரு பொருளாதார மேதை பிரதமராக இருப்பதால் நாட்டு மக்கள் வளமாக வாழ முடியும்.விலைவாசிகள் குறையும் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டன.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீண்டும் பதவி ஏற்று ஓராண்டு காலம் முடிவடைந்த நிலையில் நாட்டில் அமைதி இல்லை;தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் ஒரு பக்கம்; மாவோயிஸ்டுகளை அசைக்க முடியவில்லை ஆகிய பிரச்னைகளுடன் விலைவாசிகளும் கடுமையாக ஏறி வருகின்றன என்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் இல்லை.
இந்த ஆண்டு பருவமழை பொய்க்காது குறிப்பிட்ட மாதங்களில் பெய்தால் விவசாயப் பொருட்கள் அமோகமாக விளையும்.‘விலைவாசிகள் தன்னால் இறங்கும்’ என்றெல்லாம் பேசி வந்தார் பிரதமர் மன்மோகன். நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும் இதே கருத்தை வெளியிட்டார்.
ஆனால் நடந்தது வேறு. பருவமழை நேரப்படி துவங்கவில்லை. மேற்கு மலைத் தொடரை ஒட்டிய கேரளாவில் மட்டுமே பருவமழை தவறாது பெய்யத் தொடங்கியது.
ஆனால் இந்தியாவின் பெருவாரியான மாநிலங்களில் பருவமழை பொய்த்துவிட்டது! பருவநிலை ஆராய்ச்சியாளர்கள் கூட பருவமழை எப்போது வரும்.அது ஏன் பொய்த்து விட்டது என்பதைச் சரியாகக் கண்டுபிடித்துச் சொல்ல முடியவில்லை.
இந்திய மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கினர் விவசாயிகள்.இலட்சக்கணக்கான கிராமங்களைக் கொண்ட இந்தியாவில் விவசாயம் செய்பவர்களும் மிக அதிகம்.பருவமழை பொய்க்கும்போது இவர்கள் உணவு தானியங்களை உற்பத்தி செய்வது குறைந்து போவதுடன், நாட்டில் உணவுத் தட்டுப்பாடு வருமோ என்ற அச்சத்தையும் உண்டாக்கி வருகிறது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கஜானாவைக் காலி செய்து கொண்டிருக்கிறது என்பது பா.ஜ.க.வின் தலைவர் நிதின்கட்காரியின் குற்றச்சாட்டு.
மத்திய அரசு பெரும் பணத்தை வீண்செலவுகளாகச் செய்து கொண்டிருக்கிறது.முக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்தவில்லை என்பது பா.ஜ.க.வின் கணிப்பு.
விவசாயிகள் வங்கியில் வாங்கிய கடன்களை மத்திய அரசு ரத்து செய்ய 58000 கோடி ரூபாய் தேவைப்பட்டது. சென்ற பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பு விவசாயிகளின் கடன்களை ரத்து செய்தது அவர்களுடைய வாக்குகளைப் பெறத்தான் என்பது அனைவருக்கும் தெரியும்.
கடன்களை ரத்து செய்தால் மட்டும்,விவசாயிகள் உயர்ந்துவிட மாட்டார்கள் என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்து. விவசாயத்துறையை மேம்படுத்த விவசாயிகளுக்கு மானியம் வழங்க, புதிய சலுகைகளை வழங்க அரசு திட்டம் தீட்டவில்லை என்பதுதான் இன்றைய நிலைக்குக் காரணம்!
விவசாயிகள் பருவமழையை மட்டும் நம்பியிராமல் மாற்று வழியில் எப்படி நிலத்தடி தண்ணீரைப் பெற முடியும்.,நதிகளை இணைத்து தண்ணீர் பற்றாக் குறையைச் சமாளிக்க வழி என்ன என்பதையெல்லாம் சிந்திக்கத் தவறிவிட்டது மத்திய அரசு.
உணவுப்பொருட்களின் உற்பத்தியைப் பற்றிக் கவலைப்படாமல் மற்ற பொருட்களின் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி வந்திருக்கிறது.
உதாரணமாக, அந்நிய முதலீடுகளை பெரிய அளவில் வரவேற்றதால் தொழிற்சாலைகள் பெரிய அளவில் தோன்றியிருக்கின்றன. எலக்ட்ரானிக் சாதனங்கள் மற்றும் கார்கள் உற்பத்தி ஆகியவைகள் அதிக அளவில் பெருகி சாதனைகளைச் செய்து வருகின்றன.
உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வெகுவாக உயர்ந்து விட்டன என்பதால், இந்தியாவும் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
உலகின் சில நாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்தாலும் இந்தியா பொருளாதார நெருக்கடியில் இல்லை என்ற மாயையை உருவாக்கிவிட்டது மன்மோகன்சிங் அரசு.
அதிக அளவில் பொருட்களை உற்பத்தி செய்தால் விலைவாசிகள் தன்னால் குறையும் என்ற சிந்தனையுடன் செயல்பட்டது மத்திய அரசு.
இதன் விளைவாக அந்நிய முதலீடுகள் அதிகமாயின. இந்தியாவில் முதலீடு செய்தால் பெரிய அளவில் பணம் சம்பாதிக்க முடியும் என்று வெளிநாட்டு நிறுவனங்கள் நினைத்து செயல்பட்டன.
இதனால் ஆடம்பரப் பொருட்கள் உற்பத்தி வேகமாகப் பெருகியது. பன்னாட்டு நிறுவனங்கள் பல கார்களை அதிக அளவில் உற்பத்தி செய்யத் தொடங்கின.போட்டியின் காரணமாக கார்களின் விலைகள் குறைந்தன.
கார்களையும்,எலக்ட்ரானிக் சாதனங்களையும் வாங்க நடுத்தர வர்க்கத்தினரும் விரும்பினார்கள். பொதுத்துறை வங்கிகள் மட்டுமின்றி தனியார் வங்கிகளும் தாராளமாகக் கடன்களை குறைந்த வட்டியில் விற்கத் தொடங்கின.
கார்களை வாங்கவோ,வீடுகள் அல்லது அடுக்குமாடிகளை வாங்கவோ எட்டு சதவிகித வட்டிக்கு தாராளமாகக் கடன்களை அள்ளிக் கொடுத்தன. ஆகையால் கடன்களை வாங்கி கார்கள்.எலக்ட்ரானிக் பொருட்கள்,வீடுகள் அல்லது அடுக்குமாடிகளை வாங்க முற்பட்டார்கள்.இது ஒரு அபார வளர்ச்சியாகக் காணப்பட்டது.
ஆடம்பரப் பொருட்களை வாங்க தாராளமாகப் பணம் கிடைத்து வந்த நிலையில் மிகவும் அத்தியாவசிய உணவுப் பொருட்களையும், அன்றாடத் தேவைக்கான பொருட்களையும் வாங்க மக்களிடம் சக்தி இல்லை.
சேமிப்பில் பணம் போட்டு வைத்திருந்தவர்களுக்கு குறைந்த அளவு வட்டியே கிடைக்கத் தொடங்கியது. ஆகையால் வருவாயில் பற்றாக்குறை ஏற்பட்டது.
பெரிய நிறுவனங்கள்,அந்நிய நிறுவனங்கள்,பெரிய முதலாளிகள் தொழிலில் முதலீடு செய்து வந்தார்களே தவிர,தனியார்கள் யாரும் தொழிலில் முதலீடு செய்ய முடியவில்லை.ஆகையால் தனியார்கள் குறைந்த சம்பளத்தில் அல்லது வருவாயில் குடும்பத்தை நடத்த வேண்டியிருந்தது.
இதன் விளைவாகவே கார்களின் விலை குறைந்தாலும்,அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைய வில்லை. நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போயிற்று என்பதே உண்மை.
தேவையில்லாத பொருட்களை வாங்க வங்கிகள் கடன் தருவதாலும், வெளிநாட்டவர்கள் அதிக அளவில் முதலீடு செய்வதாலும்,பணப் புழக்கம் அதிகமாகி விட்டது.இதன் விளைவாக பணவீக்கம் ஏறிவிட்டது. அத்தியாவசியப் பொருட்களை வாங்க பெரும் பணத்தை கொடுக்க வேண்டிய ஒரு நிலை உருவாகிவிட்டது.
உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்தி அதிகமானால் மட்டுமே விலைகள் குறையும்.பற்றாக்குறை ஏற்படும் போது விலைகளை யாரும் கட்டுப்படுத்த முடியாது.
அந்திய முதலீட்டாளர்கள் அதிக அளவில் வருவதால் தகவல் தொழில் நுட்பத்துறையில் நிறைய புதுப்புது நிறுவனங்கள் தோன்றுகின்றன. இந்தத் துறையில் மிக விரைவில் லட்சக்கணக்கானவர்களுக்கு பெரிய சம்பளத்தில் வேலைகள் கிடைக்கும் என்பது செய்தி.
அதிக சம்பளம் பெறுபவர்கள் அதிகமாகும் போது, பணப்புழக்கம் மேலும் அதிகமாகும்.பணவீக்கம் மேலும் அதிகமாகும்.பணத்தின் மதிப்பு குறையும் போது அத்தியாவசியப் பொருள்களுக்கு அதிக விலையைக் கொடுக்க வேண்டும்.
இந்தியாவின் பெரும் பகுதி வானம் பார்த்த பூமியாகி விட்டது. பருவமழை தவறாமல் வந்தால்தான் விலைவாசிகள் குறையும் என்பதில் பொருளாதார நிபுணர்கள் உறுதியுடன் இருக்கிறார்கள்.
சமீபத்தில் தமிழ்நாடு மற்றும் ஆந்திர கடற்கரை ஓரத்தில் லைலா என்னும் புயல் தாக்கியபோது, பெரிய அளவில் பருவமழை வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் லைலா வலுவை இழந்து புயலுடன் கூடிய மழையாக மாறியதால் ஆந்திரா மற்றும் ஒரிஸ்ஸா மாநிலக் கடற்கரை ஓரங்கள் பெரிதும் பேரழிவிற்கு ஆளாயின! எதிர்பார்த்த அளவுக்கு லைலா பயன் தரவில்லை என்பது ஏமாற்றம்!
இந்தியாவில் நடக்கும் ஒவ்வொன்றையும் கூர்ந்து கவனித்து வரும் அமெரிக்கா, இந்தியாவில் விரைவில் பருவமழை அதிகமாக வரும் என்று அறிவித்திருக்கிறது.இதன் விளைவாக அரிசி உற்பத்தி மட்டும் 99 மில்லியன் டன் அளவுக்கு விளையும் என்கிறார்கள் அமெரிக்க பருவநிலை நிபுணர்கள்.
அமெரிக்கா சொல்வது உண்மையானால் மட்டுமே விலைவாசிகள் விரைவில் இறங்க வழியுண்டு.மற்றபடி அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு மானியம் வழங்கி விலைவாசிகளைக் குறைக்க மத்திய அரசால் முடியாது. அதன் நிதியிருப்பு சாதகமாக இல்லை!