சார்,
நித்தியானந்தா, மதுரை ஆதீனம் பற்றி உங்களின் கருத்து என்ன? வித்தியாசமான பார்வையில் பதிலை எதிர்பார்க்கிறேன்.- கல்பனா
கல்பனா, கேள்விக்கு நன்றி.
முதலில் தற்போது இருக்கும் மதுரை ஆதீனம் திரு அருணகிரி நாதர் பற்றிப் பார்க்கலாம். தற்போது இருக்கும் அருணாசலம் என்கிற ஆதீனம் ஆரம்பகாலத்தில் திமுகவின் இளைஞரணியில் ஏதோ ஒரு பதவியில் இருந்தார். திமுக ஆட்சிக் காலத்தில் சட்ட அமைச்சர் எஸ்.மாதவன் திட்டமிடலில், ஆதீனங்களுக்குள் கட்சி சம்பந்தப்பட்டவர்கள் இருந்தால் நன்மை என்பதால் இவர் ஏதோ ஒரு பதவியில் மதுரை ஆதீனத்திற்குள் சென்றார். அதைத் தொடர்ந்து ஆன்மீகப் பயிற்சிகள் பெற்று, திமுக கட்சியின் ஆதரவில் தற்போதைய 292 ஆதீனமான அருணகிரி பதவியில் அமர்ந்தார். ஆக இவரின் நியமனமே கட்சியின் ஆதரவோடு உருவாக்கப்பட்டதால் இவர் ஆதீனத்திற்கு பொறுத்தமில்லாதவர் என்றே சொல்லலாம். அதுமட்டுமல்ல ஏகப்பட்ட சினிமா விழாக்களில், அரசியல் களங்களில் மேடைகளில் நேரத்திற்கு தக்கவாறு இவர் பேசிக் கொண்டிருந்தார். அதை இவ்வுலகம் கண்டிருக்கிறது. தகுதியற்ற ஒருவர் ஆன்மீகப் பதவிக்கு வந்தால் என்னென்ன செய்வாரோ அதையெல்லாம் இவர் செய்து கொண்டு வந்தார்.
இப்படிப்பட்ட சூழலில் நித்தியானந்தா மதுரை ஆதீனமாக பொறுப்பேற்றது அக்மார்க் ஆன்மீக கார்ப்பொரேட் கம்பெனி விஷயமாகத்தான் பார்க்க வேண்டும்.
ஆன்மீக பிசினஸ் செய்யும் நித்தியானந்தா ஒரு சிறந்த நிர்வாகி. இவருக்கும் மதுரை ஆதீனத்திற்கும் எந்த வித சம்பந்தமும் ஆன்மீக ரீதியில் இல்லவே இல்லை. மதுரை ஆதீனத்தின் சொத்துக்களை தனிப்பட்ட சொத்துக்களாய் மாற்றி அதை வைத்து மேலும் மேலும் பெரிய கார்ப்பொரேட் ஆன்மீக நிறுவனத்தை உருவாக்க முனைகிறார் நித்தியானந்தா. இவருக்கு மக்கள் மீதெல்லாம் அன்பும் இல்லை, அபிமானமும் இல்லை. நித்தியானந்தாவைச் சந்திக்க வேண்டுமெனில் ஒன்று அவர் பணக்காரராக இருக்க வேண்டும், இல்லை அவர் சமூகத்தின் பிரபலமானவராக இருத்தல் வேண்டும். சாதாரண மக்களும் சந்திக்கலாம்.சாதாரண மக்கள் பொதுத்தொண்டு, சேவை என்கிற பெயரில் மூளைச் சலவை செய்யப்பட்டு காசில்லாத வேலைக்காரர்களாக ஆக்கப்படுவார்கள். இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு ஆன்மீக மடங்களிலும், மத்களிலும், ஆதீனங்களிலும், ஆசிரமங்களிலும் இதைத்தான் செய்து வருகின்றார்கள்.
ரஞ்சிதாவால் நித்தியானந்தா பிரச்சினை ஆனது பெரிய அரசியல் மர்மம். பாலியல் வழக்கு பற்றி ஒரே ஒரு வார்த்தை என்னவென்றால் ஆணும் பெண்ணும் ஓரிடத்தில் இருந்தால் பாலியல் எண்ணங்கள் வராமல் என்ன செய்யும்? நூறாண்டுகாலம் தவம் இயற்றியவர்களே பெண்ணின் மடியில் விழுந்த வரலாற்றுக் கதைகளைக் கொண்டது இந்து மதம். காமத்தின் முன்னால் நித்தியானந்தாவின் யோகமும்,தவமும் தூசு. ரஞ்சிதாவிற்கும் நித்தியாந்தாவிற்கு உடலுறவு இருந்தால் யாருக்கு என்ன பிரச்சினை என்று எனக்குப் புரியவே இல்லை. அது அவர்கள் சம்பந்தப்பட்ட ஒன்று. இவர் மீதான பாலியல் வழக்கு கோர்ட்டில் நிற்கவே நிற்காது. ஏனென்றால் வழக்குத் தொடுத்தவர் பாதிக்கப்பட்டவர் இல்லை என்கிறபோது பொதுவாய் தண்டனை கொடுக்க இந்திய அரசியல் சட்ட விதிகளில் இடம் இல்லை.
காலத்தின் போக்கில் மாட மாளிகைகள், கூட கோபுரங்கள், பெரிய தலைவர்கள் எல்லாம் காணாமலே போய் விடுவர். அதே போல பலரின் வயிற்றெரிச்சலில் விழும் நித்தியானந்தாவும், யாருக்கும் உபயோகமே படாத ஆதீனமும் கால வெள்ளத்தின் போக்கில் அழிந்து போகும் என்பது மட்டுமே நிதர்சனமான உண்மை.
கல்பனா, இது போன்ற ஆன்மீக அரசியல்வியாதிகள் பற்றியோ, மடங்களைப் பற்றியோ சாதாரண மக்களான நாம் பேசுவதால் நன்மை ஏதும் எவருக்கும் கிடைக்கப்போவதில்லை.
- அனாதி
அனாதி பதிப்பித்தது. 




