மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து திமுக நடத்தும் (ஒரு மாநிலக் கட்சி, உலம மகா ஊழல் செய்து காங்கிரஸ்ஸிடம் வகையாக சிக்கிக் கொண்டிருக்கும் அய்யோ பாவம் கட்சி) மாநாட்டிற்கு “ஈழம்” என்ற சொல்லைப் பயன்படுத்தக்கூடாது என்று கடிதம் வந்திருக்கிறது.
இதில் ஒரு ரகசியம் இருக்கிறது. சாணக்கியத்தனத்தின் உச்சகட்டம் என்பது இந்த நிகழ்வுதான். இதற்கான திட்டமிடலை செய்தவர் வேறு யாராக இருக்க முடியும்?
வழக்கம் போல பொய் மூட்டைகளை அவிழ்ப்பது போல, கடிதம் வந்த உடனே தமிழர் ஆதரவு தலைவர்கள் எல்லோரும் கருத்துக்களை அவிழ்த்தார்கள்.திமுகதான் ஈழத்திற்காக, ஈழ மக்களுக்காக போராடுகிறது என்கிற தோற்றத்தை உருவாக்கி இருக்கின்றார்கள். திமுக தான் நினைத்தை நடத்தி விட்டது.
மறுபடியும் மத்திய அரசு ஈழம் வார்த்தையை பயன்படுத்தலாம் அதுவும் சில பல கண்டிஷன்களோடு என்று மறு கடிதம் அனுப்பி இருக்கிறது. அதற்கும் சில சொரிந்து விடும் கட்சித் தலைவர்கள் ஆக்ரோஷமாய் அறிக்கைகளை விடுவார்கள்.
தற்போதைய ஆட்சியாளர்களுக்கு அரசியல் தெரியவில்லை என்பது இந்த நிகழ்வினை அவர்கள் கையாளும் போக்கில் தெரிகிறது. டெசோ நடக்கக் கூடாது அதை ஆளும் அரசு தடுக்க வேண்டுமென்று தான் திமுக நினைத்தது. அதை சரியாகச் செய்கின்றார்கள்.
திமுக கூட்டும் கூட்டத்தில் ஈழம் என்றச் சொல் பயன்படுத்தினால் என்ன பெரிதாக பலன் விளைந்திடப் போகின்றது? ஒன்றுமே இல்லை. திமுக கூட்டும் கூட்டத்தினால் ராஜபக்ஷேவிற்கு என்ன ஆகி விடப் போகின்றது? ஒன்றும் இல்லை. மானம், மரியாதை, சொரணை இருக்கும் எந்த ஈழத் தமிழனாவது திமுக கூட்டும் கூட்டத்திற்குப் போவானா? நிச்சயம் போக மாட்டான்? ஆக திமுக ஒரு நாடகத்தை நடத்த முயன்று அதில் சரியாக வெற்றி பெற்றிருக்கிறது. இந்த நாடகத்தில் தோற்றுப் போனவர்கள் அதிமுகவும், காங்கிரஸ்ஸும்.
இனி வரும் காலத்தில் திமுகவின் அறிக்கை சொல்லும் “ ஈழம் “ என்றச் சொல்லை பயன்படுத்தக்கூடாது என்றது காங்கிரஸ், மாநாட்டை நடத்த விடவில்லை அதிமுக ஆக இவர்கள் இருவரும் தமிழின விரோதிகள் என்று.
லட்சக் கணக்கில் கொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களுக்காக தன் உடலை ஆயுதமாக்கிக் கொடுத்தான் ஒரு தமிழன். அத்தமிழனின் உடலை ஆயுதமாக்கி தமிழகமே பொங்கியது. ஒவ்வொரு மாணவனும் தெருவில் இறங்கிப் போராடினான். அன்றைக்கு ஆட்சியிலிருந்த திமுக அப்போராட்டத்தை நசுக்கி அழித்து விட்டது. மூன்று மணி நேரம் உண்ணாவிரதம் ( காலையில் செம கட்டு கட்டி விட்டு வந்திருந்தாலும் சொல்வதற்கில்லை) இருந்து ஏதோ ஈழத்தமிழர்களுக்காக திமுக தலைவர் பசியோடு உண்ணாவிரதம் இருக்கிறார் என்று மக்களை ஏமாற்றி ஈழத் தமிழர்களை கொன்றொழித்து விட்டு மாநாடு நடத்துகிறாராம். பொங்கி எழுந்த தமிழ் சமூகத்தை நாடகம் போட்டு, ஏமாற்றி விட்டு இன்றைக்கு மாநாடு நடத்துகிறாராம் இவர். அதை மத்திய அரசும், மாநில அரசும் தடுக்குமாம்.
ஹிட்லர் யூதர்களை வெறுப்பதாய்ச் சொல்லி கொன்றான். அவன் நல்லவன். நேருக்கு நேராய் எதிர்ப்பவன் நேர்மையானவன். அவன் கொண்ட கொள்கைக்கு அவன் சண்டையிடுகிறான். ஆனால் இவர்?????
காலம் ஒவ்வொரு நிகழ்வையும் பார்த்துக் கொண்டே இருக்கிறது. காலத்தின் சுழலில் இவர்கள் காணாமல் போய்விடப் போகும் நேரத்தின் அறிகுறிகள் ஒவ்வொன்றாய் தென்படுகிறது. திருடன் என்றைக்கும் திருடிக் கொண்டே இருக்க முடியாது அல்லவா?
ஈழம் என்ற சொல்லை வைத்தும், ஈழத்தமிழர்களிம் பிணங்களின் மீது அரசியல் நடத்தியவர்களை எல்லாம் நாம் தலைவர் என்று அழைக்கின்றோம் அல்லவா?
- பஞ்சு
Like this:
Like ஏற்றப்படுகின்றது...