கேள்வி : அனாதி அவர்களுக்கு,அதிமுக ஆட்சியின் ஒரு வருட ஆட்சியைப் பற்றிய உங்களின் அவதானிப்பு என்ன? என்பதை எழுதுவீர்களா? -மகி,காரைக்குடி
பதில் : அன்பு மகி, ஒரே ஒரு கேள்வி காரணமாய் விகடன் மதன் இன்று விகடகவி மதனாக மாறி கேவலப்பட்டுக் கொண்டிருக்கிறார். எத்தனை புத்திசாலித்தனமிருந்தும் என்ன பிரயோசனம்? அதிகாரத்தின் முன்னே வளையாத எலும்புகளும் வளைந்து விடுகின்றனவே. இப்படியான சூழலில் ஏன் எதற்கு இப்படியெல்லாம் கேள்வி கேட்கின்றீர்கள் என்று புரியவில்லை.
மக்களின் பணத்தில் 20 கோடி ரூபாய் செலவழித்திருக்கின்றார்கள். நூறாண்டு சொல்லும் ஓராண்டுச் சாதனை என்று பஞ்ச் வேறு. ஆட்சிக்கு வந்து மூன்றே மாதத்தில் மின்வெட்டினை சரி செய்கிறேன் என்றார்கள். ஒரு வருடம் ஆகி விட்டது, இன்னும் சரியாகவில்லை. இது ஒன்றே போதும் அதிமுக ஆட்சியின் சாதனையை விளக்குவதற்கு. சட்டசபை நடவடிக்கை பற்றி விவரிக்க விரும்பவில்லை என்றாலும் கூட ஒரு விஷயம் பற்றி சொல்லித்தான் ஆக வேண்டும். அதிமுக்கியமான அசந்தர்ப்பமான நேரங்களில் மட்டுமே விவாதம் இன்றி மசோதா நிறைவேற விதி 110 பயன்படுத்துவார்கள். அதுவும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் தான் மசோதா பற்றி அவைக்குச் சொல்வார்கள். ஆனால் இப்போது நடப்பது என்ன? சட்டசபை ஜனநாயகம் கேள்விக்குறியாய் நிற்கிறது. வேறொன்றினையும் சொல்ல விரும்பவில்லை.
ஆனால் சட்டம் ஒழுங்கு சரிப்படுத்தப்பட்டிருக்கிறது. அரசியல் ஏகபோக ஆதிக்கம் குறைந்திருக்கிறது. அவ்வகையில் நல்ல ஆட்சி என்று சொல்லலாம்.
- அனாதி