இஸ்ரோ முன்னாள் சேர்மன் மாதவன் நாயர் பதவியில் இருக்கும் போது 3ஜி பேண்ட் அலைக்கற்றையை வெறும் 1200 கோடிக்கு ஒரு தனியார் கம்பெனிக்கு, பனிரெண்டு வருடக் குத்தகைக்கு கொடுத்ததை, பொதுத் தணிக்கைக் குழுவின் கண்டுபிடிப்பிற்குப் பிறகு, அதிர்ச்சியாய் ஆச்சரியமாய் நம் பிரதமர் ஒரு ஐவர் குழுவை அமர்த்தி விசாரணை செய்து அந்த விற்பனைக்கு உதவியாக இருந்த நால்வரையும் (இஸ்ரோ முன்னாள் அறிவியல் துறை செயலர் பாஸ்கரநாராயணா, ஆன்ட்ரிக்ஸ் முன்னாள் மேலாண்மை இயக்குநர் கே.ஆர்.ஸ்ரீதரமூர்த்தி, இஸ்ரோ செயற்கைக்கோள் மைய முன்னாள் இயக்குநர் கே.என். சங்கரா) அரசின் வேறு எந்த முக்கியமான பணியிலும் அமர்த்த தடை செய்திருப்பதைக் கண்டு பத்திரிக்கைகளில் பாகிஸ்தான் தீவிரவாதிகளை விட நாங்கள் கெட்டவர்களா என்று அறிக்கை விட்டிருக்கிறார் இந்த மாதவன் நாயர்.
நான் பிரதமராக இருந்திருந்தால் தேசத்துரோகக் குற்றம் சுமத்தி வாழ் நாள் முழுவதும் ஜெயிலில் தள்ளி இருப்பேன். நாட்டின் உயர்ந்த பதவியில் இருந்த இவர், தான் பலனடைய நாட்டின் உயரிய சொத்தினை குறைந்த விலைக்கு விற்றிருக்கிறார். இவர் எந்த வகையில் நம்பகத்தகுந்த விஞ்ஞானியாவார்? உலகம் முழுவதும் இருப்போர் என்ன மாங்காய் மடையர்களா? இஸ்ரோவின் ரகசியங்களை வேறு நாடுகளுக்கு இவர் விற்கமாட்டார் என்று எப்படி நம்ப முடியும்? இந்திய மக்களுக்கு சேர வேண்டிய பணத்தை மிகக் குறைந்த விலைக்கு அதுவும் 3ஜி பேண்ட் அகலக் கற்றையை 1200 கோடிக்கு பனிரெண்டு வருடம் குத்தகைக்கு கொடுத்திருக்கிறார் என்றால் எவ்வளவு பெரிய ஊழல் இது என்று நீங்களே நினைத்துப் பாருங்கள். நடக்கும் முன்பு கண்டுபிடித்து தடுத்து விட்டார்கள். இல்லையென்றால் ஒரு கணம் நினைத்துப் பாருங்கள்.
பாகிஸ்தான் தீவிரவாதி நேரடியாக வந்து சண்டை போடுகிறான். நேருக்கு நேராய் நிற்கின்றான். ஆனால் இவர் செய்தது நம்பிக்கைத் துரோகம் அல்லவா? பிரதமர் காரணம் இல்லாமல் காரியம் செய்பவர் அல்ல. மாதவன் நாயர் மீதானக் குற்றச்சாட்டில் உண்மை அல்லாமல், பிரதமர் இப்படியான உத்தரவைப் போட்டிருக்கமாட்டார் என நம்பலாம். மாதவன் நாயரையும் அந்த நால்வரையும் ஜெயிலில் போடாமல் விட்டது அவர்களால் நாட்டுக்கு ஏதோ கொஞ்சம் நன்மை கிடைத்தது என்ற காரணமாக இருக்குமே அன்றி வேறொன்றாகவும் இருக்க இயலாது.
அரசின் முக்கியப் பணிகளில் பணியாற்றி ஓய்வு பெறுவோரில் பெரும்பாலானோர் தனியார் கம்பெனிகளில் உடனடியாக உயர் பதவியில் அமர்ந்து தன் முன்னாள் தொடர்புகளை வைத்து தான் வேலை செய்யும் கம்பெனிகளுக்கு சாதகமான செயல்களை செய்து வருகின்றனர். பிரதமர் முன்னாள் அய்யேயெஸ், உயர் அதிகாரிகளுக்கு இதே போன்று தனியார் நிறுவனங்களில் சேர முடியாதவாறு சட்டத்திருத்தம் ஒன்றினை மேற்கொள்ள வேண்டியது அவசியம். அரசின் ரகசியங்களும், ராணுவ ரகசியங்களும் பல முன்னாள்களால் வெளியே விற்கப்படுகின்றன என்பதை பல பத்திரிக்கைகள் தெளிவாக எழுதி இருக்கின்றன.
ஊழல் செய்த மாதவன் நாயருக்கு பேசவே தகுதியில்லை. இதில் பேட்டி வேறு கொடுக்கிறார். கேட்கின்றவர்கள் கேனயர்கள் அல்ல என்பதை அவர் புரிந்து கொள்ள முடியாவிட்டால் அது அவருக்கு துன்பமே தவிர பிறருக்கு அல்ல. பொய் பேசுவதால் மட்டுமே ஒருவன் நியாயவான் ஆகிவிட முடியாது. செய்தது அயோக்கியத்தனம், பேசுவது நியாயமா? பாரதப் பிரதமர் மன் மோகன் சிங்கிற்கு வாழ்த்தினை தெரிவிப்போம் இந்த நல்ல நடவடிக்கைக்காக.
- பஞ்சு
செய்தி ஆதாரம் - மாதவன் நாயருக்கு அரசுப்பணி செய்ய தடை