தமிழர்களுக்கு சாப்பாடு இருக்கிறதோ இல்லையோ ஆனால் சினிமா இருக்க வேண்டும். இல்லையென்றால் தமிழனுக்கு நிம்மதியான வாழ்க்கையே இல்லை. சினிமா என்றால் சூடு, சொரணை, வெட்கம், மானம், கற்பு, கலாச்சாரம் என எதை வேண்டுமானாலும் இழக்க அவன் தயாராகி விடுவான். தன் நாட்டையே சினிமாக்காரனுக்கு தூக்கி கொடுக்கும் அளவுக்கு சினிமாவின் மீது கொள்ளை அன்பு கொண்டவன் தமிழன். வெறி உணர்வு கொண்ட ரசிகர்களுக்கு எல்லாம் தற்போது சினிமா உலகில் நடந்து வரும் உண்மையான பிரச்சினை என்ன என்று தெரிய வேண்டுமென்பதற்காக இப்பதிவு.
பெரிய தயாரிப்பாளர்கள் அதிக சம்பளம் கொடுத்து சினிமா படங்களை தயாரித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்கிறார் ஃபெஃப்சியின் செயலாளர் சிவா. ஆனால் சிறிய தயாரிப்பாளர்கள் தான் சம்பளப் பிரச்சினையில் ஈடுபடுகின்றார்கள் என்கிறார். இந்தப் பதிலிலிருந்து இச்சம்பவத்தில் ஏதோ ஒரு மறைக்கப்பட்ட உண்மை இருக்கிறது என்பது புரியலாம். அது என்ன?
இயக்குனர்கள் சங்கத்தில் ஒரு முடிவு எடுக்கின்றார்கள். இனிமேல் புது கார்டு கொடுப்பதில்லை என்று. கேட்டால் இருப்பவர்களுக்கே வேலை இல்லை, இனி புது இயக்குனர்கள் வேறு வந்தால் நிலைமை என்னவாகும் தெரியுமா என்று எதிர் கேள்வி கேட்கின்றார்கள். அப்படி என்றால் என்ன தெரியுமா? இனிமேல் புதிதாய் எவரும் சினிமாவிற்கு வரக்கூடாது என்பது தான் அந்த கார்டு கொடுக்கமாட்டோம் என்பதற்கான மறுப்பிற்கு காரணம். ஒரு யூனியன் புதியதாய் வேறு எவரையும் இணைத்துக் கொள்ள மாட்டோம் என்றுச் சொல்கின்றது என்றால் அதில் இருக்கும் அக்மார்க் சுய நல அரசியலை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். படமெடுக்க வருபவர் எவராயிருந்தாலும் சரி பழைய இயக்குனர்களை வைத்தே படமெடுங்கள் என்கிறார்கள் இயக்குனர் சங்கத்தினர். பழைய இயக்குனர்களான பாலச்சந்தர், பாரதி ராஜாவை வைத்து படமெடுத்த தயாரிப்பாளர்களின் கதி என்னவென்று கோடம்பாக்கத்தில் கேட்டால் சொல்வார்கள்.
கோடம்பாக்கத்தில் சினிமா இயக்குனர்களின் வீடுகளும், ஹீரோக்களின் வீடுகளும் தானே அதிகம் தென்படுகின்றன. ஏதாவது தயாரிப்பாளர்களின் வீடுகளை அதிகம் காணமுடியுமா? பிரபல தயாரிப்பாளர்களின் பிற்கால கதைகளை கோடம்பாக்கத்தில் சென்று கேட்டுப்பாருங்கள்? தெரியும். கண்ணீர் வரக்கூடிய பல கதைகள் இருக்கின்றன. ஜெகஜ்ஜால கில்லாடி இயக்குனர்களும், நடிகர்களும் பிழைத்துக் கொள்கின்றார்கள். தங்கள் வாழ்வையே இழந்து நடுரோட்டில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் தயாரிப்பாளர்கள். எத்தனை எத்தனையோ தயாரிப்பாளர்கள் வீடு, காடு, நகையெல்லாம் விற்று எடுத்த திரைப்படங்கள் பெட்டிகளுக்குள் தூங்கிக் கொண்டிருக்கின்றன. அதைப் பற்றி இந்த ஃபெப்சியோ இல்லை இயக்குனர்கள் சங்கமோ ஏதாவது கவலை தெரிவித்ததா? செய்யமாட்டார்கள்.
எந்த ஒரு டெக்னீஷியனுக்கும் அவனது சம்பளம் மட்டுமே குறி. ஆனால் படத்தின் முடிவு என்பது பற்றி யாருக்கும் எந்தக் கவலையும் இல்லை. தன் சம்பளம் மட்டும் பற்றிக் கவலைப்படும் டெக்னீஷியன்களுக்கு தயாரிப்பாளரின் பணத்தைப் பற்றிய கவலை ஏது? வெறும் 500 ரூபாய் சம்பளம் பெறுபவருக்கு இவ்வளவு கவலை இருந்தால் கோடிக்கணக்கில் பணம் போடும் தயாரிப்பாளருக்கு எவ்வளவு கவலை இருக்க வேண்டுமென்பதை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். ஒரு கோடி போட்டால் இரண்டு கோடி கிடைக்க வேண்டுமென்று விரும்புவார்கள். இல்லையென்றால் அம்பது லட்சம் அதுவும் இல்லையென்றால் 25 லட்சமாவது கிடைக்க வேண்டுமென்று தயாரிப்பாளர்கள் விரும்புவார்கள். அதையும் கிடைக்க விடாமல் செய்வதில் சில இயக்குனர்களுக்கு அலாதி பிரியம் உண்டு. நஷ்டம் வந்தால் மட்டும் கேட்பீர்கள், லாபம் வந்தால் எங்களுக்கா கொடுப்பீர்கள் என்பார்கள். லாபம் சம்பாதித்தால் தானே அடுத்த படம் வரும், அடுத்து அடுத்து வேலை கிடைக்கும் என்பதைப் பற்றியெல்லாம் இவர்களுக்கு யோசனையே வராது. அப்பேர்ப்பட்ட மகானுபாவர்கள் இந்த டெக்னீஷியன்கள்.
டிவிப் பேட்டியில் சிவா நக்கலாக ஒரு வார்த்தை சொன்னார். தொழிலாளிகள் தான் ஸ்ட்ரைக் செய்வார்கள், ஆனால் சினிமாவில் தயாரிப்பாளர்கள் (முதலாளிகள்) ஸ்ட்ரைக் செய்கின்றார்கள் என்று. இதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. 23 தொழிலாளர்கள்யூனியன்களிடமிருந்து என்ஓசி வாங்கினால் தான் லேப்பில் இருந்து படத்தை வெளியில் எடுக்க முடியும். பணத்தையும் போட்டு விட்டு, வேலைக்காரர்களின் அனுமதி கிடைத்தால் தான் படத்தையே வெளிவரச் செய்ய முடியும் என்று வைத்திருக்கும் சர்வாதிகாரப் போக்கினை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.
இதுபற்றி பேசிக் கொண்டே போகலாம். சினிமாவை வாழ வைத்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர்களுக்கு எந்த வித நன்றியும் பாராட்டாமல், அவர்களுக்கு எதிராய் கிளம்பி இருக்கும் இயக்குனர்கள் சங்கம், ஃபெப்சியினர் செய்யும் செயல் எதுவும் நியாயமானதாகத் தெரியவில்லை.
மேற்படிப் பிரச்சினைக்கு என்ன காரணம் தெரியுமா? வாரிசு நடிகர்களும், தயாரிப்பாளர்களும் ஒன்று சேர்ந்து கொண்டு, இனிமேல் புதிய நடிகர்களும், இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் தமிழ் சினிமா உலகில் வரவே கூடாது என்பதற்காக மேற்படி பிரச்சினையை கொளுத்திப் போட்டிருக்கிறார்கள் என்கிறது விபரம் தெரிந்த ஒரு கோடம்பாக்கத்து ஆந்தை.
இனி சினிமா படமெடுத்தால் மினிமம் பத்து கோடி வேண்டும். இல்லையென்றால் எவரும் சினிமா எடுக்க வராதே என்கிறார்களாம்.
கார்ப்பொரேட் நிறுவனங்கள் மட்டுமே இனிமேல் சினிமா தயாரிப்பில் ஈடுபட வேண்டுமெனவும், ஒரு கோடி இரண்டு கோடி பட்ஜெட் படமெல்லாம் வந்தால் வயிற்றுக்கு காணாது எனவும் முடிவு கட்டிக் கொண்டு இப்படியான பிரச்சினையை ஆரம்பித்து வைத்திருக்கின்றார்கள் என்கிறது ஆந்தை தொடர்ந்து.
தியேட்டர்களெல்லாம் சாதரணமானவர்களிடமிருந்து பெரிய பெரிய கம்பெனிகளுக்குச் சென்று விட்டன. முதல் வெற்றி இதிலே ஆரம்பித்திருக்கிறது. அடுத்த வெற்றி சிறு, குறு தயாரிப்பாளர்களை விரட்டுவதிலே இருக்கிறது. முடிவாய் தமிழ் சினிமாவை “வாரிசுகள்” கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுவார்கள். அவர்கள் சொன்னதுதான் சட்டம், வைத்துதான் நியதி என்றாகி விடும். சாதாரணமானவர்கள் இனி சினிமா பக்கம் தலை வைத்துப் படுக்க முடியாது. வேண்டுமெனில் ஷூ துடைக்கும் வேலை கிடைக்கும்.
இதன் முடிவு தான் என்ன?
பணம் தான் ஜெயிக்கும் என்கிறது ஆந்தை. சட்டமும், உண்மையும், நீதியும், நேர்மையும் பணத்தின் முன்பு சலாமடிக்கும் என்பதெல்லாம் நமக்குத் தெரிந்த உண்மை.
இன்னும் சினிமா உலகில் நடைபெற்று வரும் அயோக்கியத்தனங்கள் எவ்வளவோ இருக்கின்றன. அதைப் பற்றி எல்லாம் எழுத ஆரம்பித்தால் பலருக்கு பெரும் பிரச்சினை வரும் என்பதால் எழுதுவதை நிறுத்தி இருக்கிறோம்.
- பஞ்சு
அனாதி பதிப்பித்தது. 

