அரசியலில் நாகரீகம் என்பது மருந்துக்குக் கூட தமிழகத்தில் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. மாண்புமிகு முதல்வர் அவர்கள் ஜெயலலிதாவை எப்படி எல்லாம் அழைப்பார் என்பது உலகிற்கே தெரிந்த ஒன்று. ஏனென்றால் இதே ஜெயலலிதாவிற்கும் இவ்ர் தான் ஐந்து வருடங்களுக்கு முதல்வர் என்பதையும் மறந்து விடுகிறார். ஒரு முதல்வரை எவ்வாறு அழைக்க வேண்டுமென்பது கூட தெரியாமல் மூச்சுக்கு மூச்சு பெயர் சொல்லி அழைத்து வருவது முன்னாள் முதல்வரின் அரசியல் நாகரீகம்.
படித்த, பண்பட்ட, அரசியல்வாதிகளில் மூத்தவருமான, மதிப்பிற்குரிய தலைவருமான முதல்வர் அவர்கள், அரசியல் நாகரீகத்தை கிஞ்சித்தும் கடைபிடிக்க வில்லை என்பதும் இதே நாகரீகத்தை முன்னாள் முதல்வரும் கடைபிடிப்பதைக் கண்டு நாம் எப்படிப் பட்ட தலைவர்களைக் கொண்டிருக்கிறோம் என்பதை நினைத்து வேதனை தான் ஏற்படுகிறது.
ஒரு தடவை திரு நேரு அவர்கள் தன் ஆட்சியைப் பற்றி தானே விமர்சித்து புனை பெயரில் கட்டுரை வெளியிட்டாராம். அந்தளவுக்கு மக்களின் மீதும், ஜன நாயகத்தின் மீது அபிமானமும், இந்தியாவின் வளர்ச்சியின் மீது அக்கறையும் கொண்ட தலைவர்கள் இருந்த இந்தியாவில், இப்போது இருக்கும் தலைவர்களின் யோக்கியதையை என்னவென்று சொல்வது.
கக்கன் என்ற உள்துறை அமைச்சரைப் பற்றி பத்திரிக்கையில் வெளியான செய்தி ஒன்றினைப் படித்தேன். அரசுப் பதவியில் இருந்து இறங்கிய அடுத்த நாள், பஸ்ஸில் சென்றாராம் அவர். இன்றைக்கு இருக்கும் அரசியல்வாதிகளில் எவராவது இத்தகைய தூய உள்ளத்தோடும், அர்ப்பணிப்போடும் இருக்கின்றார்களா என்று கேட்டால் என்ன பதில் சொல்ல முடியும்?
தமிழக அரசியலைப் பொறுத்தவரை தலைவர்களைப் பார்த்து தான் பிறரும் தங்களை தகவமைத்துக் கொள்கிறார்கள் என்பதை ஆணித்தரமாய் சொல்லலாம். அதிமுக முன்னாள் அமைச்சர்களும், திமுக அமைச்சரும் பேசிய் பேச்சுக்களே அதற்கான ஆதாரங்கள்.
”தி.மு.க. அரசை மைனாரிட்டி அரசுன்னு சொல்ற ஜெயலலிதா இன்னும் மேஜராகலையா? அந்த அம்மாவை எப்படி கன்னித்தாய்னு கூப்பிடுறாங்க? குழந்தை கிழந்தை பெத்து இருந்தாதானே அதுக்கு குடும்பத்தோட அருமை தெரியும்…”
- திரு மு.க. அழகிரி – திமுக மத்திய அமைச்சர்
”கருணாநிதி பிறந்த நாளுக்கு நைட்டு ரெண்டரை மணிக்கு கனிமொழி வாழ்த்து சொல்லுறார். அடுத்து கட்சியில புதுசா சேர்ந்த குஷ்பு வாழ்த்து சொல்லுறார். இதுல என்னாச்சு தெரியுமா… குஷ்பு வீட்டுல பிரச்னையாகிடுச்சு. (கண்ணடித்து ஜாடை காட்ட… அவர் முகத்தைப் பார்க்க சகிக்கவில்லை!) அவங்க குடும்பத்துல மட்டுமில்ல… கருணாநிதியால பல குடும்பத் துலயும் பிரச்னைதான். அழகிரி ஒரு அமாவாசை. அவர் ஆட்டம் இன்னும் ஆறு மாசத்துக்குத்தான். அதுக்கு அப்புறம் அம்மா ஆட்சிதான்!”
- திரு ராம ராஜன் – அதிமுக
”டேய், போலீஸ்காரங்களா… என்னாங்கடா நினைச் சிட்டு இருக்கீங்க. நான் தேனியில் ரூம் போட்டு இருந்தேன். ஒரு போலீஸ்காரன் உள்ளே வந்து, ‘கூட்டத்துல நீங்க அப்படிப் பேசணும்… இப்படிப் பேசணும்… என்ன பேசப் போறீங்கன்னு எழுதிக் கொடுங்க…’னு எனக்கே கிளாஸ் எடுக்குறான். நான் என்ன உன்னைப் பெத்த அம்மாவையா தாக்கிப் பேசப் போறேன்? சரிதான் போடா… எங்க அம்மா பரம்பரை பணக்காரங்க. ஆனா அவங்க மதுரையில திருட்டு சி.டி., பழைய துணி வித்துட்டு திரிஞ்சாங்க. அவங்களுக்கு என்ன பாரம்பரியம் இருக்கு? அவங்களுக்கு எப்படி நாகரிகம் தெரியும்? தா.கிருஷ்ணனை கொலை செஞ்சவன் யாரு? தினகரன் பத்திரிகையை எரிச்சு ரவுடித்தனம் பண்ணினது யாரு? எங்க அம்மாவுக்கு 10 மொழி தெரியும். உனக்குத் தமிழும் ஒழுங்கா வராது. இங்கிலீஷ§ம் தெரியாது. உனக்கு எல்லாம் ஒரு மத்திய மந்திரி பதவி… அதான் மொழி தெரியாம பயந்துட்டு நாடாளுமன்றத்துக்குப் போகாம மாலத்தீவுல போயி படுத்துக்கிற…”
– முன்னாள் அமைச்சர் திருமதி வளர்மதி – அதிமுக
(இதே முன்னாள் அமைச்சருக்கு பாதுகாப்பு வழங்கிய காவல்துறையினரைப் பற்றி அமைச்சரின் பேச்சு எப்படி இருக்கிறது என்று பாருங்கள். ஏதோ இந்தியாவில் ஒட்டிக் கொண்டிருக்கும் கொஞ்ச நஞ்ச ஜனநாயகம், இருக்கிறது என்பதற்கு சாட்சியாய் சில நீதிபதிகளும், நேர்மை தவறாத காவல்துறை அதிகாரிகளும் இருக்கின்றார்கள் என்பதே சாட்சி. அவர்களையும் முன்னாள் அமைச்சர் ஏகத்துக்கும் பேசியிருப்பதை வைத்து, என்ன எழுதுவது என்றே புரியவில்லை)
”கருணாநிதி குடும்பத்து ரகசியம் எல்லாம் எனக்கு மட்டும்தான் தெரியும். அதையும் சொல்லுறேன் கேளுங்க. (பல வார்த்தைகள் இங்கு பிரசுரிக்க முடியாதவை…) கருணாநிதி வீட்டுத் திண்ணையில் யார் யாரெல்லாம் படுத்துக் கிடந் தாங்கனு எனக்குத் தெரியும். ..”
– ராஜ்யசபா எம்பி திரு எஸ். எஸ். சந்திரன், அதிமுக
நன்றி : செய்தி வழங்கிய ஜூவி
: அரச்சான்
அனாதி பதிப்பித்தது. 

