நடிகை வந்து சென்றதும், எனக்குள் எழுந்த பலப்பல எண்ணங்கள் மற்ற செயல்களைச் செய்யவிடாமல் தடுத்தன. கணவன் மீது நடிகைக்கு பயம் வர ஏது காரணம்? நடிகையின் தோழியின் கணவரை நடிகை தன் கணவராகத் தறிக்க என்ன காரணம்? நடிகையின் கணவனின் முன்னாள் மனைவியுடன் எப்போதும் எந்தப் பிரச்சினையும் ஏற்பட்டதில்லையே, பின்னர் எப்படி இந்தத் திருமணம் நடந்தது?
கேள்விகள் ! கேள்விகள் !! என்னைக் குடைந்தன.
முடிவில் நடிகையின் கணவனைச் சந்திக்க முடிவெடுத்தேன். சிங்கப்பூரில் இருக்கும் அவரது அலுவலக தொலைபேசி எண்ணைச் அழுத்தினேன். எதிர் முனையில் வினஷ். இரவு பதினோறு மணியளவில் பண்ணை வீட்டுக்குள் நுழைந்தார் வினஷ். விசாரிப்புகள் முடிந்து, குடிக்க ஆரம்பித்தோம். மிதமான போதையிலிருந்த வினஷ்ஷிடம் மெதுவாக ஆரம்பித்தேன். அவரின் மனைவி இங்கு வந்தார் என்று கேட்டவுடன் அவரின் முகம் சற்றே இறுகியது. விபரங்களை சொன்னேன். அமைதியாக இருந்தார். பின்னர் மெதுவாக பேச ஆரம்பித்தார். அதைக் கேட்க, கேட்க எனக்குள் எழுந்த வியப்பிற்கு எல்லையே இல்லை.
அப்படி என்ன பேசினார் என்று கேட்கின்றீர்களா? சொல்கிறேன்.
நடிகையின் பெயர் சிமி என்று வைத்துக் கொள்ளுங்கள். வினஷ்ஷின் முன்னாள் மனைவியின் பெயரை ரினி என்று வைத்துக்கொள்ளுங்கள். இனி மேட்டருக்கு வருவோம்.
சிமியும், ரினியும் படு நெருக்கமான தோழிகள். சிமி மிகவும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவள். ஆனால் ரினியோ பெரிய நிலச்சுவாந்தாரரின் மகள். சிமிக்கு தானும் ரினி அளவுக்கு வசதி வாய்ப்பில் முன்னேற வேண்டுமென்ற ஆவல். அதன் காரணமாய் சினிமாவைத் தேர்ந்தெடுத்தாள். ரினி தடுத்தும் கேளாமல் சினிமாவிற்குள் நுழைந்த சிமி, ஆரம்பத்தில் சின்னச் சின்ன ரோல்களில் நடித்துக் கொண்டிருந்தாள். அவள் எதிர்பார்த்த நடிகை ரோல் கிடைக்கவே இல்லை. அதற்கே அவள் எதையெதையோ இழக்க வேண்டியிருந்தது. எங்கே தான் கண்ட கனவு பலிக்காமல் போய் விடுமோ என்ற காரணத்தால் குடி, புகை, போதையில் மிதக்க ஆரம்பிக்க, இதைத் தெரிந்து கொண்ட ரினி அவளைத் தடுத்து, தன் கணவனின் மூலமாக பெரிய தயாரிப்பாளரின் படத்தில் நடிக்க வைத்தாள். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட். அன்று முதல் சிமி தனக்கு வாழ்வைத் தந்த கடவுளாக வினஷ்ஷை நம்ப ஆரம்பித்தாள். ஆரம்ப காலங்களில் கடவுளாக பூஜித்தவள், பின்னர் அவரையே தன் கணவனாக பூஜிக்க ஆரம்பித்து விட்டாள். அவள் நடித்த படங்கள் எல்லாம் அவளுக்காகவே ஓடின. கோடிகளில் புரண்டாள். ரினிக்கு கோடிகளில் பரிசளித்து மகிழ்ந்தாள். அடிக்கடி ரினி வீட்டில் வளைய வந்தாள். சில நாட்கள் ரினி வீட்டிலேயே தங்க ஆரம்பித்தாள். சிமி வினஷைக் குறிவைத்துதான் அங்கு வருகிறாள் என்பது ரினிக்கு தெரியவில்லை.
நாட்கள் சென்றன. கொஞ்சம் கொஞ்சமாக சிமி தன் வலையில் வினஷை வீழ்த்தி விட்டாள். ரினியுடன் அடிக்கடி சண்டையிட ஆரம்பித்தார். மந்திரித்து விட்ட கோழி போல சிமி சொல்வதையெல்லாம் கேட்க ஆரம்பித்த வினஷ் தான் என்ன செய்கிறோம் என்பதே தெரியாமல் ரினியை எதிரியைப் போல பாவிக்க ஆரம்பித்தார். முதலில் எதுவும் புரியாமல் குழம்பிய ரினி, நாளடைவில் சிமியின் கொடூர குணம் தெரிந்து அவளிடம் சண்டைக்குச் சென்றிருக்கிறாள். ஆனால் அதற்குள் வினஷ் சிமியின் முழுக்கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறார். தன் மீது கொள்ளை அன்பு கொண்ட வினஷ் மாறியதைக் கண்டு ரினி உள்ளுக்குள் புழுங்கித் தவித்தாள். ரினி படித்தவள். மற்றவர்களின் மனது புண்படக்கூடாது என்று நினைப்பவள். வினஷ்ஷின் மீது உண்மையான அன்பு கொண்டவள். ஆகையால் வினஷ்ஷின் சந்தோஷத்தைக் கெடுக்க விரும்பாமல் அவளே மனமுவந்து அவரிடம் விவாகரத்துப் பெற்றாள்.
பிரச்சினை இத்தோடு முடிந்திருந்தாள் நன்றாக இருந்திருக்கும்.
சிமியை முறைப்படி திருமணம் செய்து கொண்ட வினஷ், மலேஷியாவிற்கு டூர் சென்றார். இதற்கிடையில் பெரும் வயிற்று வலியில் துடித்துக் கொண்டிருந்த வினஷ் முழு மருத்துவ பரிசோதனை செய்திருக்கிறார். உடம்பில் எந்தக் கோளாறும் இல்லையென்று மருத்துவ அறிக்கை சொல்லியிருக்கிறது. காரணம் தெரியாமல் வயிற்று வலியோடவே இருந்திருக்கிறார். டூர் முடிந்து வீட்டுக்குத் திரும்பியவர், தன் நண்பரிடம் வயிற்று வலியைப் பற்றிச் சொல்லி இருக்கிறார். அவரின் நண்பரின் ஆலோசனைப் படி, இருவரும் ஓரிடத்திற்குச் சென்றிருக்கின்றனர்.
தொடர்ந்து அவர் பேசியதை அப்படியே தருகிறேன்.
அனாதி, நீ நம்பவே மாட்டாய், அதுவும் இந்தக் காலத்தில் இப்படியும் நடக்குமா என்பதெல்லாம் நம்பவே முடியாது. என்னிடம் சொல்லியிருந்தால் நான் சிரித்திருப்பேன். ஆனால் இனி நான் சொல்லப்போவது அத்தனையும் உண்மை என்று பெரும் பீடிகையினை போட்டார்.
அந்த இடத்திலிருந்தத ஒருவர் என் கையைப் பிடித்துப் பார்த்து விட்டு, இன்னும் இரண்டு மாதங்கள் சென்றிருந்தால் செத்துப்போய் இருப்பீர்கள் என்று சொல்ல அதிர்ந்து விட்டேன்.
ஏன் அப்படிச் சொல்கின்றீர்கள் என்று கோபத்துடன் கேட்க, சிரித்துக் கொண்டே, அதற்கான காரணத்தை இன்னும் சிறிது நேரத்திற்குள் தெரிந்து கொள்ளப்போகின்றீர்கள் என்று சொன்னார்.
வாயிலொரு பைப்பைச் சொருகி அவர் வாய் மூலமாக இழுக்க ஆரம்பித்தார். சளியும் கோழையும் பைப் வழியாக வெளியே கொட்டியது. கிட்டத்தட்ட முப்பது சின்னஞ் சிறு உருண்டைகள் அனாதி. கருப்புக் கலரில், பாசி பிடித்தது போல இருந்தது. வெளியே எடுத்துத் தள்ளினார்.
என் வாழ் நாளில் இப்படி பாதிக்கப்பட்டவரைத் தற்போதுதான் சந்திக்கிறேன் என்று சொன்னார் அந்த ஆள்.
அசந்து போய் விட்டேன்.
இனிமேல் வயிற்று வலி இருக்காது என்று சொல்லி, கருப்புக் கலரில் ஒரு பாட்டிலை என்னிடம் கொடுத்து ஒரு மாதம் முழுவதும் இதைப் பயன்படுத்துங்கள், ஆனால் உங்கள் வீட்டாருக்கு தெரிய வேண்டாமென்றார்.
அன்றிலிருந்து என் வாழ்க்கையில் என்னைச் சுற்றியிருந்த மர்ம முடிச்சுகள் ஒவ்வொன்றும் அவிழத் தொடங்கி விட்டன அனாதி.
சிமி என் மீது கொண்ட காதலினால் தான் அவ்வாறு செய்திருக்கிறாள் என்பதையும் அறிந்து கொண்டேன். ரினியின் மீது எள்ளளவும் தவறு இல்லை. அத்தனை தவறுகளுக்கும் காரணம் நான் தான் என்றுச் சொல்லி அழுதார்.
ஒன்றும் பேசாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
என்ன செய்வது? இரண்டு பெண்களின் அன்புக்கிடையில் மாட்டிக் கொண்டேன்.
ரினியின் வாழ்க்கை பாழ்படுவதை நான் விரும்பவில்லை. ஆகையால் ஆஸ்திரேலியாவில் அவளோடு நான் குடும்பம் நடத்துகிறேன். இது சிமிக்கு அரசல் புரசலாக தெரிய வந்திருக்கிறது போலும். அதனால் தான் உன்னைச் சந்தித்திருக்கிறாள் என்று சொன்னார்.
அனாதி, இந்தப் பிரச்சினையை நீதான் தீர்த்து வைக்க வேண்டுமென்று சொல்லி விட்டு கிளாசைக் கையில் எடுத்துக் கொண்டார்.
என்ன செய்யப்போகிறேன் நான் ?
சிமியின் காதலும் உண்மை, அவள் தவறு செய்த்தும் உண்மை. இதில் பாதிக்கப்பட்டது இருவரது வாழ்க்கை. சிக்கிக் கொண்டவர்கள் வினஷ்ஷும், ரினியும். இந்த பிரச்சினைக்கு என்னதான் வழி ? தீர்வு என்ன ? குழப்பம் ! குழப்பம் !!!
-
அனாதி
Like this:
Be the first to like this பதிவு.